Archives: அக்டோபர் 2022

வார்த்தைகளுக்கு அப்பால்

தாமஸ் அக்வேனாஸ் (1225-1274), திருச்சபையின் அதிகம் போற்றப்படுகிற விசுவாசத்தின் பாதுகாவலர். ஆயினும், அவரது மரணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன், அவரது மிகப்பெரிய படைப்பான “சுமா தியாலோஜிகா” (ளுரஅஅய வுhநழடழபiஉய) என்னும் எழுத்துப்பணியை முடிக்கவிடாமல் ஏதோ தடை ஏற்பட்டது. உடைக்கப்பட்ட சரீரத்துடன் இரத்தஞ்சிந்தும் இரட்சகரைத் தரிசனத்தில் பார்த்ததாக அக்வேனாஸ் சொல்லுகிறார். அவர், “இனிமேல் என்னால் எதுவும் எழுதமுடியாது. என்னுடைய எழுத்துக்களை பதராய் பார்க்குமளவிற்கு சில காரியங்களை நான் பார்த்தேன்” என்று சொல்லுகிறார்.
அக்வேனாஸ் பார்த்ததைப் போன்று பவுலும் தரிசனம் பார்த்திருக்கிறார். 2 கொரிந்தியரில் அவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்: “அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்” (12:3-4).
பவுலும் அக்வேனாஸும் வார்த்தையினாலும் ஆதாரங்களினாலும் விவரிக்கமுடியாத சமுத்திரம் போன்ற தெய்வீக நன்மைகளை நமது சிந்தனைக்கு விட்டுச் சென்றனர். அக்வேனாஸ் கண்டவைகளின் தாக்கங்கள் தன்னுடைய பணியை செய்யக்கூடாதபடி அவரை பாதித்தது, தேவன் தம்முடைய குமாரனை நமக்காக சிலுவையிலறையப்பட அனுப்பிய செயலுக்கு உவகையாக உள்ளது. ஆனால் அதற்கு முரணாக, பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து எழுதினார். ஆனால் தன்னுடைய சுயபெலத்தால் சிலவற்றை விவரிக்க முடியாது என்பதை அறிந்தே எழுதினார்.
அவருடைய போராட்டங்களுக்கு மத்தியில், பலவீனமான நேரங்களில் அவருடைய வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தேவனுடைய கிருபையையும் நன்மையையும் திரும்பிப் பார்த்து கர்த்தருடைய ஊழியத்தை நேர்த்தியாய் செய்தார் (2 கொரிந்தியர் 11:16-33; 12:8-9).

தேவன் சொன்னார்

விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் 1976ஆம் ஆண்டு தொலைப்பேசியில் முதல் வார்த்தைகளைப் பேசினார். அவர் தன்னுடைய உதவியாளராகிய வாட்சனிடம், “வாட்சன், இங்கே வா. நான் உன்னைப் பார்க்கவேண்டும்” என்று சொன்னார். வார்த்தைகள் உடைந்து கேட்கப்பட்டாலும், கிரகாம்பெல் என்ன சொன்னார் என்பதை வாட்சனால் புரிந்துகொள்ள முடிந்தது. தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொள்ளப்பட்ட கிரகாம்பெல்லின் முதல் வார்த்தைகள், மனித சரித்திரத்தில் தொடர்புகொள்ளுதலின் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம் எனலாம்.
ஒரு புதிய நாளின் துவக்கத்தில் ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்த பூமியில் “வெளிச்சம் உண்டாகக்கடவது” (வச.3) என்ற தேவனின் முதல் வார்த்தைகள் ஒளித்தது. இந்த வார்த்தைகள் சிருஷ்டிப்பின் வல்லமைகொண்ட வார்த்தைகள். அவர் சொன்னார்; சொன்னது நிஜமாகவே தோன்றியது (சங்கீதம் 33:6,9). தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. இருளில் மூழ்கியிருந்த உலகம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒளிக்கு இடங்கொடுத்தது. ஒளி என்பது, இருளின் ஆதிக்கத்திற்கு தேவன் கொடுத்த பதில். அவர் ஒளியை உண்டாக்கியபோது, “அது நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4).
தேவனுடைய இந்த முதல் வார்த்தைகள் கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் வல்லமையுள்ளதாய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உதயமாகும்போது, அவர் நம்முடைய வாழ்க்கைக்கு அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உரைக்கிறார். ஒளி வரும்போது இருள் மறைந்து ஒளிக்கு இடங்கொடுப்பதுபோல, அவர் நம்மை அழைத்து அவரைப் பார்க்கும்படி செய்கிறார் என்பதை உணர்ந்து அவருக்குத் துதிகளை ஏறெடுப்போம்.

ஓராண்டில் வேதாகமம்

எப்.பி. மேயெர் (1847-1929) என்னும் ஆங்கில பிரசங்கியார், “வாசம்பண்ணும் கிறிஸ்துவின் ஆழமான தத்துவம்” என்ற அவருடைய போதனைக்கு முட்டையை உதாரணமாய் பயன்படுத்துகிறார். ஒரு முட்டைக்குள் இருக்கிற உயிருள்ள கரு ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைந்து ஒரு கோழிக்குஞ்சாய் உருவெடுக்கிறதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல, பரிசுத்த ஆவியானவர் மூலமாய் இயேசு கிறிஸ்துவும் நமக்குள் வாசம்பண்ணுகிறார். மேயெர், “இதிலிருந்து கிறிஸ்து உங்களுக்குள் வளர்ந்து பெருகி, அனைத்தையும் அவருக்குள் உறிஞ்சி, உன்னில் முழுமையாய் உருவாகப்போகிறார்” என்று சொல்லுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் மூலமாய் நமக்குள் வாசம்பண்ணும் கிறிஸ்து என்னும் மகிமையான சத்தியத்தை அவர் நேர்த்தியாய் விளக்கவில்லை என்பதை அவர் அறிந்து, இயேசுவை நேர்த்தியற்ற விதத்தில் சித்தரித்ததற்காக மன்னிப்பும் கோரினார். ஆனால் இயேசு “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” (யோவான் 14:20) என்ற தெய்வீக சத்தியத்தை மற்றவர்களோடு பகிரும்படிக்கு விசுவாசிகளை அவர் ஊக்கப்படுத்தினார். இயேசு தன் சீஷர்களோடு கடைசி போஜன பந்தியிருக்கையில் இதைச் சொன்னார். அவருக்கு கீழ்ப்படிகிற யாவருக்குள்ளும் இயேசுவும் பிதாவும் வந்து வாசம்பண்ணுவார்கள் என்ற சத்தியத்தை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார் (வச. 23). யார் அவரை விசுவாசிக்கிறார்களோ அவர்களை உள்ளும் புறம்பும் மறுரூபமாக்குவதற்கு ஆவியானவர் மூலம் அவர்களுக்குள் இயேசு வாசம்பண்ண முடியும்.
நீங்கள் எந்த வழியில் உருவகப்படுத்தினாலும் சரி. கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுகிறவர், வழிநடத்துகிறவர், அவரைப்போல் மாறுவதற்கு உதவிசெய்கிறார்.

வாழ்க்கையின் அடையாளங்கள்

என்னுடைய மகள் இரண்டு நண்டுகளைப் பரிசாகப் பெற்றாள். ஒரு கண்ணாடிப் பெட்டியை உண்டாக்கி, அதில் மணலைப் போட்டு, அதில் அந்த நண்டுகள் வாழ்வதற்கு ஏதுவான அமைப்பை ஏற்படுத்தினாள். அது உயிர்வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், புரதச்சத்து, காய்கறிகள் ஆகியவற்றை அதில் வைத்தாள். அவைகள் மகிழ்ச்சியாய் இருப்பதுபோல தெரிந்தது. ஆனால் ஒரு நாள் அந்த நண்டுகள் காணாமல் போய்விட்டது. எங்கே என்று தேடினோம். கடைசியில் அது தன்னை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது என்று கண்டறிந்தோம். அப்படியே இரண்டு மாதங்கள் அது மண்ணுக்குள்ளேயே புதைந்து, தன்னுடைய ஓட்டை மட்டும் வெளியே காண்பித்தவண்ணம் இருந்தது.
மூன்று மாதங்கள் கடந்துபோனது. அது மரித்துவிட்டதோ என்று நாங்கள் கவலைகொள்ள ஆரம்பித்தோம். காத்திருந்து பொறுமையிழந்தோம். கடைசியில் அது உயிரோடிருப்பதற்கான அடையாளங்களைப் பார்த்தோம். மண்ணுக்குள்ளிருந்து எண்ணற்ற நண்டு குஞ்சுகள் வெளியேறியது.
இஸ்ரவேலர்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்த நாட்களில் தேவனுடைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுமா என்று சந்தேகித்திருக்கக்கூடும் என்று நான் எண்ணுகிறேன். அவர்கள் சோர்வுற்றிருந்தார்களோ? அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிருப்பிலேயே முடிந்துவிடுமோ என்று அஞ்சினார்களோ? எரேமியாவின் மூலம் தேவன் அவர்களுக்கு, “நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் (எருசலேமுக்கு) திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்” (எரேமியா 29:10) என்று சொல்லுகிறார். எழுபது ஆண்டுகள் கழித்து, பெர்சிய மன்னன் கோரேசின் மூலம், யூதர்கள் தங்கள் சுதேசம் திரும்பி, ஆலயத்தைக் கட்டிக்கொள்ளும்படி செய்தார் (எஸ்றா 1:1-4).
எந்த மாற்றங்களும் நிகழாமல் காத்திருக்கும் நாட்களில், தேவன் நம்மை மறந்துவிடுவதில்லை. பரிசுத்த ஆவியானவர் நம்மில் பொறுமையை உண்டாக்கும்போது, அவர் நம்பிக்கையின் காரணர், வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர், எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடியவர் என்பதை நாம் அறியக்கூடும்.